உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
52 வயதாகும் இந்த தையல்காரர் எழுந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இரண்டு அடுக்கு மாடி வீட்டை பார்வையிட்டார். அந்த வீட்டிலிருக்கும் 11 அறைகளில் ஒன்பது அறைகளின் சுவர்களில் விரிசல் இருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
உடனடியாக அந்த வீட்டில் இருந்து தனது 11 குடும்ப உறுப்பினர்களையும், சேதமடையாமல் இருந்த இரண்டு அறைகளுக்கு மாற்றினார், குடும்பத் தலைவரான பிரகாஷ் பூட்டியால். சிறிய அளவில் விரிசல் இருக்கும் அந்த இரண்டு அறைகளில் தான் மொத்த குடும்பமும் இப்போது வரை தங்கியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய மலை நகரமான ஜோஷிமட்டில் உள்ள தனது வீட்டில் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் கேட்ட பெரும் சத்தம் பிரகாஷ் பூட்டியாலை தூக்கத்தில் இருந்து எழுப்பியது.
52 வயதாகும் இந்த தையல்காரர் எழுந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள தனது இரண்டு அடுக்கு மாடி வீட்டை பார்வையிட்டார். அந்த வீட்டிலிருக்கும் 11 அறைகளில் ஒன்பது அறைகளின் சுவர்களில் விரிசல் இருப்பதை கண்ட அவரது குடும்பத்தினர் பீதியடைந்தனர்.
உடனடியாக அந்த வீட்டில் இருந்து தனது 11 குடும்ப உறுப்பினர்களையும், சேதமடையாமல் இருந்த இரண்டு அறைகளுக்கு மாற்றினார், குடும்பத் தலைவரான பிரகாஷ் பூட்டியால். சிறிய அளவில் விரிசல் இருக்கும் அந்த இரண்டு அறைகளில் தான் மொத்த குடும்பமும் இப்போது வரை தங்கியுள்ளது.
இங்குள்ள 4,500 கட்டிடங்களில் 670க்கும் மேற்பட்ட கட்டிடத்தில் விரிசல்கள் உருவாகியுள்ளன. இதில் ஒர் உள்ளூர் கோயிலும் மற்றும் ஒரு ரோப்வேயும் அடங்கும். நடைபாதைகள் மற்றும் தெருக்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டு ஹோட்டல்கள் ஒன்றுடன் ஒன்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. வயல்களில் இருந்து தண்ணீர் வெளியேறிக்கொண்டே இருப்பதன் காரணம் குறித்து இன்னும் முழுமையாக தெரியவில்லை.
சுமார் 80 குடும்பங்கள் வரை தங்கள் வீடுகளில் இருந்து அருகில் உள்ள பள்ளி, ஹோட்டல்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்புக் குழுவினர் இங்கு வந்துள்ளனர். தேவைப்பட்டால் ஹெலிகாப்டர்கள் கொண்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். "உயிர்களைக் பாதுகாப்பதே எங்களின் முன்னுரிமை" என்று உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகிறார்.
நகரமே புதைய என்ன காரணம்?
ஜோஷிமட் நகரமே ஆபத்தான புவியியல் சூழ்நிலைகளில் இருந்து வருகிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பத்தால் தூண்டப்பட்ட நிலச்சரிவின் இடிபாடுகளில் இருந்து உருவானது தான் மலைச்சரிவில் அமைந்துள்ள ஜோஷிமட் நகரம். இந்த ஊர் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் அதிகமுள்ள மண்டலத்தில் அமைந்துள்ளது.
நிலம் பல்வேறு காரணங்களுக்காக புதைய தொடங்கி இருக்கலாம். பூமியின் வெளிப்புற அடுக்கில்(Earth's crust) ஏற்பட்ட இயக்கத்தின் காரணமாகவோ, நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட உயர மாறுதல் என பல்வேறு காரணங்களுக்காக இங்குள்ள நிலம் பூமிக்குள் புதைய தொடங்கி இருக்கலாம்.
இது மட்டுமின்றி, மனிதர்களின் நடவடிக்கை கூட இதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணமாக அதிக நிலத்தடி நீரை பயன்படுத்துவது, முறையற்ற வடிகால் அமைப்பு போன்ற மனிதர்களின் தலையீட்டினால் கூட ஜோஷிமட்டில் இந்த நிலை ஏற்பட்டு இருக்கலாம்.
இதே போன்ற நிலை தான் இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும் நடந்தது என்று புவியியலாளர்கள் நம்புகின்றனர். அதன் முறையற்ற வடிகால் அமைப்பு காரணமாக, ஜகார்த்தா உலகின் பிற நகரங்களை விட வேகமாக மூழ்கி வருகிறது.
உலகெங்கிலும் 80% க்கும் அதிகமான நிலச்சரிவு, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் தான் ஏற்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோஷிமட்டின் இந்த நிலைக்கு மனிதத் தலையீடு தான் காரணம் என புவியியலாளர் டி.பி.தோபல் கூறுகிறார். "பல தசாப்தங்களாக விவசாயத்திற்காக இங்குள்ள நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு வந்தது. இதனால் பூமிக்கு அடியில் உள்ள மண் மற்றும் பாறைகள் எளிதில் உடையக்கூடிய அளவில் மாறின. இதனால் பூமிக்கு அடியில் இருக்கும் மண் இலகுவதால், நகரம் மெதுவாக புதையத் தொடங்கி இருக்கிறது," என அவர் விளக்கினார்.
40 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரிக்கை
1976ஆம் ஆண்டிலேயே, அரசின் ஆய்வு ஒன்று ஜோஷிமட் புதைந்து வருவதாக எச்சரித்தது, மேலும் இப்பகுதியில் கனரக கட்டுமான பணிகளை தடை செய்ய பரிந்துரைத்தது. போதுமான வடிகால் வசதிகள் இல்லாததால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன என்று அது சுட்டிக்காட்டியது. "ஜோஷிமட் நகரம் மனிதர்கள் குடியேற்றத்திற்கு உகந்தது அல்ல" என்று அந்த ஆய்வு எச்சரித்து இருந்தது.
ஆனால் அந்த எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பல தசாப்தங்களாக, இந்த இடம் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருந்து வருகிறது.
இங்கிருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ள இந்துக் கோயில் நகரமான பத்ரிநாத்திற்கு யாத்ரீகர்கள் இந்த வழியாக செல்கின்றனர். இது மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம், பனிச்சறுக்கு போன்ற கேளிக்கைகளுக்காக ஜோஷிமட்டிற்கு வருகின்றனர். இதனால் இந்த நகரத்தில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளன.

